Saturday, March 8, 2008

நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி திருநாரையூரில் பிறந்தவர். ஒருசமயம் தந்தை அவசர வேலையாக வெளியூர் சென்று விட அவர் பணியான பொள்ளாப் பிள்ளையாருக்கு பூஜை, நிவேதனம் செய்யும் பொறுப்பு சிறுவனான இவரிடம் ஒப்படைக்கப் பட்டது. விநாயகர் நிஜமாகவே சாப்பிடுவார் என்று நினைத்திருந்த குழந்தை நம்பி பலமுறை கெஞ்சி அழைத்தார். கணேசர் அசையவில்லை. “தான் செய்த பூஜை சரியில்லை. நைவேத் யம் எடுத்து வருகையில் விளை யாட்டில் கவனமாக இருந்து விட்டோம்” என்றெல்லாம் எண்ணி மனம் கலங்கிய நம்பி
கோயில் சுவரில் தலையை முட்டிக் கொண்டு அழுதார். அதைக் கண்டு மனம் பொறாத விக்னேஸ்வரர் நம்பியைத் தடுத்து நிவேதனத்தைச் சாப்பிட்ட ருளினார். திரும்பி வந்த தந்தை யிடம் நம்பி நடந்ததைச் சொல்ல, தந்தை “பிள்ளையாராவது, நைவேத்யத்தை நேரில் உண்பதா வது! பொய் சொல்கிறாய்” என்று மிரட்ட, தந்தை காண மீண்டும் கணபதியை அழைத்து உண்ணச் செய்தார் நம்பி. பொளியாப் பிள்ளையாரே (உளியால் பொளியப் படாமல் சுயம்புவாகத் தோன்றியவர்) மக்கள் வாக்கில் மருவி பொல்லாப் பிள்ளையாராகிவிட்டார்.கணபதியே ஆசிரியராகி இவருக்கு தமிழ் கற்பித்தார். இச்செய்தி நாடெங்கும் பரவியது. மன்னன் இராஜராஜன் விநாயகருக்கு உகந்த பழங்கள், கரும்பு, தேன், அவல், பொரி, எள்ளுருண்டை, அப்பம் ஆகியவற்றை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு திருநாரையூர் வந்தான். நம்பியிடம் அவற்றை எல்லாம் விநாயகரை சாப்பிட வைக்கும்படி வேண்டினான்.

நம்பியும் அபிஷேக ஆராதனைகள் நடத்தி கணேசரைப் பிரார்த்திக்க அவரும் அவர் விருப்பத்தை பூர்த்தி செய்தார்.“தேவாரத் திருமுறை களும், திருத்தொண்டர் வரலாறும் தமிழ் மக்களுக்குத் கிடைக்க வேண்டும்” என்று மன்னன் பிரார்த்திக்க “தில்லையில் மூவர் கை முத்திரையுடன் ஒரு அறையில் தேவாரச் சுவடிகள் உள்ளன” என்றுரைத்த கணபதி திருத் தொண்டர் வரலாற்றை நம்பிக்கு போதித்தார். நம்பிகளுடன் சிதம்பரம் சென்றான் சோழன். தேவார மூவர்களுக்கும் பூஜை செய்து ஏடுகள் இருக்கும் அறையின் முன் நிறுத்தி, தில்லைவாழ் அந்தணர்களைக் கொண்டு கதவைத் திறக்கச் செய்தான். ஓலைச் சுவடிகளைக் கரையான் புற்று மூடியிருந்தது. . குடம் குடமாய் எண்ணையைச் சொரிந்து புற்றை அகற்றினான் கொற்றவன்.

“மன்னா! வருந்தாதே! இக்காலத்துக்கு ஏற்புடையவை அரிக்கப்படவில்லை” என்று அசரீரி ஒலித்தது. அந்த ஏடுகளைச் சிதையாமல் எடுத்துத் தொகுத்துத் தரும் பணியையும் நம்பிகளிடமே ஒப்படைத்தான் வேந்தன்.

11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய பெருமையும் நம்பிக்கு உண்டு. நம்பி பாடியவை திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திரு சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியன வாகும்

No comments: